Tamil blogs | ஹோட்ஜாவின் கதைகள்! | short story collection of hilarious Hodja
நகைச்சுவை
கதைகள் பல நாம் கேள்விப் பட்டிருப்போம். அவற்றுள் ஹோட்ஜாவின் கதைகளும் ஒன்று.
மூன்று சிறிய ஹோட்ஜா கதைகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
1. ஹோட்ஜவுக்கும் மனைவிக்கும் சண்டை!
ஒரு
நாள் ஹோட்ஜாவிற்கும் அவர் மனைவிக்கும் சண்டை. வாக்கு வாதம் முற்றி வீட்டை விட்டு
வீதிவரை வந்து சண்டை போட ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்தில் கோபத்தில்
ஹோட்ஜாவின் மனைவி பக்கத்து வீட்டிற்குள் சென்று விட்டாள்.
பக்கத்து
வீட்டுகாரர் இனிப்புக் கடை வைத்திருப்பவர், ஹோட்ஜாவின் நெருங்கிய நண்பர். இவர்கள்
இவ்வாறு சண்டை போடுவதை பார்த்து அவரும் அவர் மனைவியும் அவர்களைச் சமாதானப் படுத்த
முயற்சி செய்தனர்.
இருவரையும்
தனி அறைக்கு அழைத்துச் சென்று, இனிப்புப் பலகாரங்கள் கொடுத்துப் பேசிக் கோபத்தை தனிய
வைத்தனர். ஹோட்ஜவிற்கும் மனைவிக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த வாக்கு வாதம் சற்று
தணிந்தது.
இருவரும்
அமைதியாக வீட்டிற்கு சென்றனர். ஆனால் அது கொஞ்ச நேரம் கூடத் தாங்கவில்லை. மீண்டும்
இருவருக்கும் வாக்கு வாதம் தொடங்கியது. ஹோட்ஜாவின் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்லத் தயாராகினாள்.
அவ்வளவு வாக்கு வாதத்திற்கு இடையில் ஹோட்ஜா,
‘இந்த முறை நீ செல்வதாக இருந்தால் சண்டைப்போட்டுக் கொண்டே பக்கத்து வீட்டிற்கு
மீண்டும் செல்லாதே அங்கு இனிப்புகளின் சுவை சுமாராகத் தான் உள்ளது. எதிர் வீட்டு
கேக் கடைக் காரரின் வீட்டிற்கு போ. அவர் செய்யும் கேக் சுவையாக இருக்கும்’ எனக்
கூறினார்.
அதுவரை
கோபத்தின் உச்சியில் சண்டை போட்ட மனைவி சட்டென்று சிரிக்க ஆரம்பித்து
விட்டாள்.
2. மோசமான கனவு!
ஹோட்ஜா
தன் வேலைகளை முடித்து விட்டு வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின்
நெருங்கிய நண்பர் வெளிய சென்றுக் கொண்டிருப்பதை கண்டார். ‘வீடு திரும்பும்
வேளையில் எங்கே போற?’ என்று ஹோட்ஜா அவர் நண்பரிடம் கேட்க, ‘பூசாரியைப் பார்க்கப் போறேன்’ என்றார் அந்த நண்பர். ‘என்ன விஷயம்? ஏதேனும் பிரச்சனையா?’ என்று கேட்டார்
ஹோட்ஜா.
‘ஆமாம்
ஹோட்ஜா. ஒரு கெட்ட கனவு மீண்டும் மீண்டும் எனக்கு வந்துக் கொண்டே இருக்கிறது. இரவு
சரியாக உறங்க முடியவில்லை. அதான் பூசாரியைச் சந்தித்து பிரச்சனைக்குத் தீர்வு கேட்கப் போறேன்’ என்றார் நண்பர்.
‘அப்படி
என்ன கனவு உனக்கு வருகிறது?’ ஹோட்ஜா விடுவதாக இல்லை.
‘நான்
உறங்கும்பொழுது என் கனவில் என் கட்டிலுக்கு கீழே பேய் இருப்பது போலத் தெரிகிறது.
பயந்து உறக்கத்திலிருந்து எழுந்து உண்மையில் என் கட்டிலுக்கு கீழே பார்த்தால் பேய்
எதுவும் இல்லை. ஆனால், பயத்தால் போன உறக்கம் மீண்டும் வருவதில்லை. இதே கனவு
தொடர்ந்து எனக்கு ஒரு வாரமாக வந்துக் கொண்டே இருக்கிறது’ என்று கவலையோடும்
பயத்தோடும் கூறினார் ஹோட்ஜாவின் நண்பர்.
‘சரி. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு அளித்தால் நீ பூசாரிக்கு எவ்வளவு காசுகள் தருவாய்?’ எனக்
கேட்டார் ஹோட்ஜா.
‘பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தால் சுமார் 100
காசுகள் தரலாம் என்று இருக்கிறேன்’ என்று நண்பர் கூறியதும், ‘நான் இதற்குத் தீர்வுக் கூறுகிறேன், எனக்கு வெறும் 50 காசுகள்
கொடுத்தால் போதும்‘ என்றார் ஹோட்ஜா.
’50
காசுகள் போதுமா? சரி ஒப்புக்
கொள்கிறேன். தீர்வைக் கூறு’ என ஆர்வமாக அவர் நண்பர் கேட்டார்.
‘தினமும்
நீ கட்டிலில் தூங்கும்போது கீழே பேய் இருப்பதாக உனக்குக் கனவு வருகிறது. சரிதானே? இனி
தரையில் தூங்கு, பேய் உனக்குக் கீழே வராது’ என்றுக் கூறியப்படி நண்பனிடமிருந்து 50 காசுகள் வாங்கிக் கொண்டு வீட்டை
நோக்கி நடந்தார் ஹோட்ஜா.
அவர்
நண்பர் ஹோட்ஜாவின் தீர்வைக் கேட்ட அதிர்ச்சியில் உறைந்துப் போனார்.
3. மான் எங்கே?
ஒரு
முறை ஹோட்ஜா காட்டிற்கு சில மூலிகை செடிகளைப் பறிக்கச் சென்றுக் கொண்டிருந்தார்.
சுமார் 6 நபர்கள் கொண்ட வேட்டைக்கார கூட்டம் ஒன்று அவரை நோக்கி வந்தது.
அவர்களின்
தலைவன் தன் குதிரையிலிருந்து கீழே இறங்கி வந்தான். ‘இந்தப் பக்கம் மான் எதாவது
சென்றதை பார்த்தீர்களா?’ என்று ஹோட்ஜாவை கேட்டான்.
ஹோட்ஜா
சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தார் பிறகு, ‘ஆமாம் கண்டேன்’ எனக் கூறினார்.
‘எந்தப் பக்கம் சென்றது வலப்பக்கமா? இடப்பக்கமா?’ எனத் தொடர்ந்து விசாரித்தார் வேட்டைக்கார
கூடத்தின் தலைவன்.
‘அந்த
மான் வலப்பக்கமாகச் சென்றது’ என்றார் ஹோட்ஜா.
மொத்த
கூட்டமும் வலப்பக்கமாக மானைத் தேடிச் சென்றது.
சிறிது
நேரம் கழித்து மீண்டும் ஹோட்ஜா இருந்த இடத்திற்கே வந்தனர்.
‘ஏதேனும்
மான் உங்களைக் கடந்து இடப் பக்கமாக ஓடியதா?’ எனக் கேட்டனர்.
ஹோட்ஜா,
‘இல்லையே இடப் பக்கமாக எந்த மானும் சென்று நான் பார்க்கவில்லை’.
மீண்டும்
அவர்கள், ’உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? மான் வலப்பக்கமாகத் தான் சென்றதா? நீங்கள்
முதலில் கொடுத்த தகவல் சரி தானா? நாங்கள் அனைவரும் பல மணி நேரமாக அந்த இடத்தில்
தேடி விட்டோம், அந்த மான் கிடைக்கவில்லை’ எனக் கூறினர்.
‘என்
தகவல் மீதே சந்தேகமா? எனக்கு நிச்சயமாகத் தெரியும் நான் 10 நாட்களுக்கு முன்bu காட்டிற்கு வந்தப் பொழுது இதே
இடத்தில் தான் மான் வலப்பக்கமாக ஓடியதை என் இரண்டு கண்களால் பார்த்தேன். இன்று வரை
அதை என் நினைவில் வைத்துத் பிழையின்றி உங்களிடம் சரியாகக் கூறியுள்ளேன்’ என்றார் ஹோட்ஜா.
'10 நாட்களுக்கு முன்பு ஓடிய மானைப் பற்றிய தகவலைக் கொடுத்துள்ளாரா? இதை நம்பி பல மணி நேராமாகத் தேடிக் கொண்டிருந்தோமே' என்று சோர்ந்திருந்த வேட்டைக்காரர்கள்
கூட்டம் ஆடிப் போனது.
தொடர்புடைய பிற கதைகள்:
தொடர்புடைய பிற கதைகள்:
Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை
‘Tamil Stories 4 Everyone’ தொடர்பதிவில் பல வித்தியாசமான கதைகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அடுத்த கதையை உடனே பெற்றிட நம் குழுவில்
இணைந்திடுங்கள்!
Comments
Post a Comment