Tamil blogs | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா?
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை 'Tamil blogs | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா?' படிக்கத் தயாராகுங்கள்!
அது ஒரு அழகிய ஊர். அங்கு எல்லா விதாமான வளங்களும் நிறைந்து இருந்தது. வெள்ளி நீரோடை, பச்சை பசேலென வயல்கள், கால காலத்தில் பெய்திடும் மழை, சூரிய சக்தியின் ஆசிர்வாதம், சில்லென மனதை மயக்கும் காற்று என இயற்கையின் அருள் நிறைந்த ஊர் அது. மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த அந்த ஊரில், பேராசை கொண்ட மில் காரன் ஒருவனும் இருந்தான்.
செல்வங்களுக்குக் குறைவில்லை எனினும் அவனுக்குள்ளே இருந்த பேராசை தீ இன்னும் எரிந்துக் கொண்டே இருந்தது. மக்கள் பலரை ஏமாற்றி செல்வத்தையும் நிலங்களையும் வயல்களையும் சேர்த்த வரலாறும் அவனுக்கு உண்டு. அவன் மில் -இல் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் குறைந்த ஊதியம் தந்து ஏமாற்றி வந்தான். பணக்காரன் என்பதால் யாரும் அவனைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை.
பஞ்சம் பிழைக்க வந்த சகோதரர்கள்
வளங்கள் நிறைந்த ஊர் என்பதால், பிற ஊர் மக்களும் பஞ்சம் பிழைக்க இந்த ஊர் தேடி வருவது வழக்காமான ஒன்று தான். அப்படி வந்த மக்களில் பலர் அந்த மில் காரனிடம் சிக்கி குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து வந்தனர். அப்படி பஞ்சத்தினால் அவதி பட்டு அந்த ஊரில் பிழைக்க வாய்ப்பு தேடி வந்தனர் 2 சகோதர்களும் அவர்கள் அம்மாவும்.
பல நாட்கள் ஊருக்குள் அலைந்து திரிந்து அவர்கள் அம்மாவின் உடல் நலம்குன்றியது தான் மிச்சம். அம்மாவிற்கு வைத்தியம் பார்க்கக் கூடக் கையில் பணமின்றி தவித்தனர் சகோதரர்கள். அந்தச் சமயத்தில் தான் மில் காரனிடம் வேலை தேடி வந்தனர். மில் காரனும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள ஒப்புக் கொண்டான். ஆனால் அந்த ஊதியம் சகோதர்களின் கைச்செலவிற்கே பத்தாது என உணர்ந்தனர். மில் காரனிடம் தங்கள் அம்மாவின் நிலைகுறித்து விளக்கினர்.
'எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்கிறோம் அய்யா. ஊதியம் அதிகமாகத் தாருங்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வைத்தியம் செய்யாவிடில் நோய் முற்றி விடுமாம். உதவி செய்யுங்கள்!' எனக் கெஞ்சினர். பேராசை குணம் கொண்ட அந்த மில் காரன் அவர்களின் நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டான்.
'ஊதியத்தை உயர்த்தி தர இயலாது. ஆனால், நீங்கள் இவ்வளவு கெஞ்சி கேட்பதால் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்' என மனதிற்குள்ளே சிரித்து கொண்டே கூறினான். 'என்ன ஒப்பந்தம் அய்யா? எங்கள் அம்மாவின் உயிர் காக்க எதுவும் செய்வோம்' எனக் கம்பீரமாகக் கூறினர்.
மூன்று வேலைகள்
'இது தான் ஒப்பந்தம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீங்கள் நான் கூறும் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தால், உங்களுக்கு 1௦௦ பொற்காசுகள் தருகிறேன். அப்படி ஏதேனும் ஒரு வேலையை நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் இருவரும் எனக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாக ஊதியமின்றி வேலை செய்ய வேண்டும். சம்மதமா?'
இரண்டு சகோதர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சிறிது சிந்தித்தனர். 'சரி அய்யா! சம்மதம். இரண்டு வாரங்கள் இறுதியில் பொற்காசுகளை கொடுத்து விடுவீர்களா?' என ஒன்றாகக் கேட்டனர். நிச்சயமாகத் தருவதாக ஒப்புக் கொண்டான் மில் காரன்.
இரண்டு வாரங்கள் கடுமையான வேலைகளை அவர்களுக்குத் தந்தான். அம்மாவின் உயிரைக் காக்க எதையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாகக் கடுமையாக உழைத்தனர். இரண்டாம் வாரத்தின் இறுதி நாள் வந்தது. வழக்கம்போல அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு மில் காரனிடம் வந்து நின்றனர். ' அய்யா! வேலைகள் முடிந்தது. தாங்கள் சொன்னதுப் போலப் பொற்காசுகள் கொடுத்தால், நாங்கள் அம்மாவைக் காப்பற்றி விடுவோம்' என ஆர்வமாகக் கூறினர்.
மில் காரன், ' என்ன தம்பிகளே அவசரம்? இன்றைய நாள் இன்னும் முடியவில்லை. உங்களுக்கு இன்னும் மூன்று வேலைகள் காத்திருக்கிறது. ஒன்று.... இந்தச் சிறிய கண்ணாடி கோப்பை உடையாமல் அந்தப் பெரிய கண்ணாடி கோப்பையை அதனுள் நீங்கள் போட வேண்டும். இரண்டு..... இந்த அறையினுள் இருக்கும் தானியங்களை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்லாமல் உலர்த்த வேண்டும். மூன்று.... என் தலையின் எடை எவ்வளவு எனக் கூற வேண்டும்.'
மில் காரன் தங்களை ஏமாற்ற நினைப்பதை உணர்ந்துக் கொண்டனர் சகோதரர்கள். எனினும், மனம் உடையாமல் 'சரி அய்யா!' எனக் கூறி சென்றனர். சகோதர்கள் இருவரும் என்ன செய்வது என அறியாமல் திகைத்தனர். மனம் வருந்தாமல் புத்தியை தீட்டத் தொடங்கினர்.
செய்து முடித்து விட்டோம்!
சிறிது நேரம் கழித்து.... ' அய்யா, நீங்கள் சொன்ன வேலைகளை முடித்து விட்டோம். பொற்காசுகளை தாருங்கள்' எனக் கேட்டனர். திகைத்துப் போனான் மில் காரன்.
அந்தக் கண்ணாடி கோப்பைகளைக் கண்டான். பெரிய கண்ணாடி கோப்பையை உடைத்து தூளாகச் சிறிய கண்ணாடி கோப்பைக்குள் போட்டிருந்தனர். சிறிய கோப்பை உடையக் கூடாது என்பது தானே நிபந்தனை! மில் காரன் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டான்.
தானியங்கள் உலர்ந்ததா எனப் பார்க்கச் சென்றான். அறையில் கூரை இல்லை. 'எங்கே கூரை?' எனக் கோவத்தோடு கேட்டான். 'அய்யா, நீங்கள் தான் வெளியே எடுத்துச் செல்லாமல் உலர்த்த சொன்னீர்கள்..... கூரையை எடுக்கக் கூடாது சொல்லவில்லையே!' மனமின்றி ஒப்புக் கொண்டான் மில் காரன்.
'அய்யா, உங்கள் தலையின் எடை 2.875 கிலோ' எனக் கூறினர். மில் காரன் ஆச்சிரியத்தோடு, 'எப்படி கூறுகிறீர்கள்?' சகோதரர்கள் புன்முறுவலுடன் 'உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்களே எடைப் போட்டுப் பாருங்கள் அய்யா!' எனக் கூறினர். அவர்களின் அறிவு கூர்மையை கண்டு வியந்த வண்ணம் 1௦௦ பொற்காசுகளை கொடுத்தான்.
தொடர்புடைய பிற கதைகள்:
தொடர்புடைய பிற கதைகள்:
Tamil blogs | யாரு சார் நீங்க? | Short Tamil Story of a stranger
இந்தக் கதை ' Tamil blogs | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா?' உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இன்னும் பல சுவாரஸ்யமான கதைகள் படிக்க 'Tamil Stories 4 Everyone' குழுவில் இணைந்திடுங்கள்!
Comments
Post a Comment