Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey
ஒரு
அழகிய காலை வேளை. ஊருக்கு வெளியே பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சூரியன்
தன் கதிர்களால் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார். சூரியனின்
கதிர்கள் அந்த ஆற்றின் மீது பட, தங்கத்தை உருக்கி ஊற்றியது போல ஓடியது. அந்த ஆறு
தவழ்ந்து செல்லும் வழியில் பச்சை பசேலெனச் செடி கொடிகள். மனிதனின் மனதை மயக்கி அமைதி
தரும் அழகிய காட்சி.
அந்த
நேரம் அதன் வழியாகச் சென்றுக் கொண்டிருந்தது ஒரு கார். அதுவரை நிற்காமல் ஊரை நோக்கிப் பயணித்த கார் திடீரென நின்றது. அந்தக் காரிலிருந்து ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர் இறங்கினார். அதோடு முடியவில்லை அந்தக் கார் பெருமூச்சி விடும்
அளவிற்கு தொடர்ந்து ஆட்கள் அதிலிருந்து இறங்கினார்கள். ஒரு வழியாகக் கடைசியாக ஒருவர்
காரின் கதவை மூடினார்.
அவர்கள்
அனைவரும் பண்டிதர்கள். அந்த ஊரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு இறைவனை தரிசிக்க
சென்றுக் கொண்டிருந்தனர். சரியாக மொத்தம் 10 பண்டிதர்கள். அந்தக் காட்சி அவர்களைக் காரை விட்டுக் கீழே இறங்க வைத்துள்ளது.
நீராடும் ஆசை
அனைவரும்
அங்கு ஓடிக்கொண்டிருந்த நீரோடையை நோக்கிச் சென்றனர். தூய்மையான அந்த நீரோடை அவர்கள் கண்களுக்குப் பவித்திரமான நீர் போலக் காட்சி அளித்தது. அங்கு அவர்கள் நீராடிச் செல்ல முடிவெடுத்தனர். ஆற்றின் வேகம் சிறிது அதிகமாகக் காணப்பட்டது. என்ன செய்யலாமெனச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
ஆற்றின்
வேகத்தில் யாரும் அடித்துச் செல்லாமல் இருக்க அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு
ஒன்றாக நீராடி வர முடிவு செய்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆற்றில் இறங்கினர்.
திட்டமிட்டது
போல நீராடினர் ஆனால் மேலே ஏறுவதற்குள் கைகளை விட்டுவிட்டனர். ஒவ்வொருவரும்
தனித்தனியாக ஏறினர். உடனே அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது ‘நாம் அனைவரும் பாதுகாப்பாகக் கரை ஏறி விட்டோமா?’ அல்லது ‘யாரேனும் தவற விட்டு விட்டோமா?’ என்று. குழப்பத்தைப் போக்க அந்தப் பண்டிதர்கள் எண்ணி பார்க்க முடிவு செய்தனர்.
அனைவரும் ஒரு
வரிசையில் நின்றுக் கொண்டனர். வரிசையிலிருந்து ஒருவர் முன்னே வந்து எண்ண தொடங்கினார்
1...2...3...4…5…6…7…8…9. ‘ அச்சச்சோ! நாம் 9 பேர் தான் உள்ளோம். ஒருவரை
ஆற்றில் தவற விட்டு விட்டோம்’ என்று பதறினார் எண்ணியவர். வரிசையிலிருந்து
இன்னொருவர் வந்து ‘பொறு, நீ தவறாக எண்ணியிருப்பாய். நான் எண்ணுகிறேன்’ என்று
எண்ணினார். அவருக்கும் 9 எண்ணிக்கையே வந்தது. ‘ஆமாம். ஒருவரை தவற விட்டோம், யார்
அது என்று தெரியவில்லையே’ என்று புலம்பத் தொடங்கினர்.
வரிசையிலிருந்து
வந்து எண்ணும் நபர், அவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 9 என்று தவாறாக எண்ணி
ஒருவரை தவறவிட்டதாக எண்ணி புலம்புவதை, கவனித்துக் கொண்டிருந்தார் ஒரு தொப்பி
விற்பனையாளர். அவர்களுக்கு உதவ முயற்சி செய்தார்.
‘பண்டிதர்களே!
நீங்கள் தவறாக எண்ணுகிறீர்கள். நீங்கள் அனைவரும் நில்லுங்கள் நான் எண்ணிச்
சொல்லட்டுமா?’ என்று கேட்டார். தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று ஆணவம் கொண்ட
பண்டிதர்கள், ‘தம்பி நாங்கள் அதிகம் படித்த பண்டிதர்கள், நீயோ தொப்பிக்காரன்.
எங்களைவிட அறிவில் சிறந்தவனா நீ? எங்களுக்கு எல்லாம் தெரியும், உன் உதவி
வேண்டாம்’ என்று கர்வத்தோடு பதில் அளித்தனர்.
‘சரி
பண்டிதர்களே. வெயில் அதிகமாக உள்ளது காரில் ஏறும் வரை ஆளுக்கொரு தொப்பி போட்டுக்
கொள்ளுங்கள்’ என்று தொப்பியை இலவசமாக நீட்டினான். பண்டிதர்களும் இலவசமாகத் தருவதால் வாங்கிப் போட்டுக் கொண்டனர்.
மீண்டும்
தொடங்கினான் தொப்பிக்காரன், ‘நான் ஒன்றுக் கூறினால் தவறாக எடுத்துக் கொள்ள
மாட்டீர்களே? நீங்களே எண்ணுங்கள் ஆனால் இந்த முறை ஆட்களுக்குப் பதிலாக நீங்கள்
அணிந்திருக்கும் தொப்பியைக் கழற்றி என்ன வேண்டும்’ என்று சொல்லிப் பார்த்தான்.
‘அது
சரி. ஆட்களே 9 நபர் தான் உள்ளோம் தொப்பி பத்தாகவா இருக்க போகிறது?’ என்று ஒருவன்
கூற மற்றொருவன், ‘முயற்சி செய்து தான் பார்ப்போமே? எப்படி எண்ணினாலும் 9 தான்
வரும் என்பதை தொப்பிக்காரனுக்கு செய்துக் காட்டுவோம்’ என்றான்.
தொப்பிகாரனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
தொப்பிக்காரன்
மனதிற்குள்ளே சிரித்தப்படி, ‘ஆமாம் அய்யா. என் அறிவுக்கு தெரியவில்லை
செய்துக்காட்டுங்கள்’ என்றான்.
அவர்கள்
அனைவரும் தாம் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி ஆற்றின் ஓரம் வைத்தனர். இப்பொழுது
ஒருவர் வந்து எண்ணினார். ‘1...2...3…4…5…6…7…8…9………10! ஆஹா! 10 தொப்பிகள். தொப்பி போடும் முன்பு 9 நபர்களாக இருந்த நாம் இப்பொழுது 10 நபர்கள் ஆகிவிட்டோம். இது ஒரு அதிசய
தொப்பி!’ என ஆச்சிரியத்தோடு கூறினான்.
அனைவரும்
‘ஆமாம்... ஆமாம்... அதிசய தொப்பி’ என்று துதி பாடினர். அவர்களுக்கு உதவ மட்டுமே
நினைத்த அந்தத் தொப்பிக்காரன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
‘தம்பி,
இந்த அதிசய தொப்பிகளை நாங்களே வைத்துக் கொள்கிறோம். ஒரு தொப்பிக்கு 100 ரூபாயென 1000 ரூபாய் இந்தா வைத்துக்கொள்’ எனப் பண்டிதர்களுள் ஒருவன் கூறி பணத்தைக் கொடுத்தார்.
தொப்பிக்காரனுக்கு
ஒரே மகிழ்ச்சி எனினும் நேர்மையற்று சம்பாதிக்க அவன் விரும்பாமல், ‘இல்லை அய்யா’
என்று சொல்லத் தொடங்குவதற்குள், ‘சரி அது போதாது என்றால் இதோ முடிவாக 2000’ என்று மேலும் 1000 ரூபாய் கொடுத்தனர். தொப்பிக்காரன் பேச்சைக் கேட்காமல் சட்டென்று காரில் ஏறிப் பறந்தனர்.
தொடர்புடைய பிற கதைகள்:
தொடர்புடைய பிற கதைகள்:
Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை
நண்பர்களே! இந்தக் கதை Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற மேலும் பல கதைகளைப் படிக்க 'Tamil Stories 4 Everyone' குழுவில் இணைய மறந்துவிடாதீர்கள் ;)
Comments
Post a Comment