Tamil blogs | பணக்காரர் வீட்டு விருந்து! ! Mullah at grand food party- short story
முல்லா
பற்றிய பல கதைகளை நாம் கேள்விப் பட்டிருப்போம். இதுவும் அவருடைய சுவாரசியமான
கதைகளில் ஒன்று.
ரம்ஜான்
நோன்பின் கடைசி நாள் அன்று. அன்றையபொழுது சாய்ந்தால் அனைவரும் தங்கள் விரதத்தை
உணவு உண்டு முடிப்பர். ஊரின் மக்கள் அனைவரும்பொழுது சாய்வதர்காகக் காத்திருந்தனர்,
அவர்களுள் முல்லாவும் ஒருவர்.
முல்லா,
‘மாலை பொழுது எப்பொழுது வருமோ?’ என்று எண்ணியப்படி தன் வேலையைச் செய்ய வெளியே
கிளம்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம்
கேட்டது. ‘யார் அது? உள்ளே வாருங்கள்’ என்றுக் கூறியப்படி எட்டி பார்த்தார்
முல்லா.
பணக்காரரின் வருகை
அந்த ஊரின்
மிகப் பெரும் பணக்காரர் முல்லாவின் வீட்டிற்குள் வந்தார். ‘வாருங்கள்! வாருங்கள்!’
என முல்லா உள்ளே அழைத்து அவரை உபசரித்தார். ‘என்ன விசேஷம்?’ என முல்லா கேட்க,
‘இன்று இரவு என் வீட்டில் உணவு விருந்து வைத்துள்ளேன். இந்த ஊர் மக்கள்
அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறேன். நீங்களும் உங்கள் நோன்பை விருந்தில்
கலந்துக் கொண்டு முடிக்க வேண்டும்’ என்று முல்லாவுக்கும் அழைப்பு விடுத்தார்.
முல்லாவிற்கு
ஒரே சந்தோஷம், ‘நிச்சயமாக வருகிறேன்’ என்று கூறினார். ‘அப்போ இரவு விருந்தில்
சந்திப்போம்’ என்று கூறிக் கொண்டே அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். முல்லாவும் தன் வேலைகளைச் செய்ய வெளியே சென்றார். நாள் முழுவதும் முல்லாவின் மனதிற்குள், ‘மாலை
விருந்தில் பல வகை இனிப்புகள், அறுசுவை உணவுப் பண்டங்கள், பல்வேறு பழங்கள் இன்னும்
பல உணவுகள் இருக்குமே. அனைத்தையும் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்’ என்ற
எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
முல்லாவிற்கு
அன்று வேலைகள் கொஞ்சம் அதிகாமாக இருந்தது. கடுமையாக உழைத்து அனைத்தையும் ஒரு
வழியாக முடித்து விட்டு நேரத்தைப் பார்த்தார். ‘விருந்திற்கான நேரம் வந்து விட்டதே.
வீட்டிற்கு சென்று வேறு உடைகளை மாற்றி விட்டுச் சென்றால் தாமதமாகி விடும். நான் தாமதமாகச் சென்றால் உணவுப் பண்டங்கள் தீர்ந்து விடும். என்ன செய்யலாம்?’ என்று
யோசித்தார். ‘சரி, நேராக விருந்திற்கு சென்று விடுவோம்’ என்று பணக்காரர் வீடு
நோக்கி நடந்தார்.
நாள்
முழுவதும் உழைத்ததால் முல்லாவின் காலணிகள் சேறு பட்டு ஆடைகள் களைந்து அழுக்காக இருந்தது.
முல்லாவிற்கு அதைப் பற்றிச் சிறிது கவனம் இருந்தாலும், உணவு தீருவதற்குள் செல்ல
வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.
பாழான ஆசை
விருந்து
நடக்கும் இடத்தை அடைந்தார் முல்லா. வாசலில் பணக்காரர் நின்றுக் கொண்டிருந்தார்.
முல்லா உள்ளே வரும்போது அவரின் தோற்றத்தைக் கண்டு பணக்காரர் முகம் சுளித்தார்.
எனினும் விருந்தினர் என்பதால் வேறு வழியின்றி உள்ளே வரும்படி சைகை காட்டினார்.
முல்லா அதைக் கவனித்தார் ஆனால் உணவு முக்கியம் என்று உள்ளே நுழைந்து விட்டார். உள்ளே
செல்லும்போதே பல பண்டங்கள் காலியாக இருந்தது. ஒரு தட்டு எடுத்து வேண்டிய உணவுகளை
எடுத்துக் கொண்டு அமர இடம் தேடினார்.
யாரும்
அவருக்கு அமர இடம் தரவில்லை. ஒரு இடத்தை அவரே தேர்ந்தெடுத்து அமர்ந்தார், உடனே
அவர் அருகில் இருந்தவர்கள் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டுஅங்கிருந்து எழுந்து
சென்றனர். ஆரம்பத்தில் அதைக் கண்டுக் கொள்ளாமல் உணவு உண்ட முல்லாவால் தொடர்ந்து
சாப்பிட முடியவில்லை.
அவரை
அனைவரும் நடத்தும் விதம் அவர் மனதிற்கு வேதனை அளித்தது. உணவைப் பாதியிலே போட்டு
விட்டு வெளியே சென்றார். நேராக அவர் வீட்டிற்கு சென்றார், ஒரு புதிய உடை
அணிந்தார். மீண்டும் பணக்காரர் வீட்டிற்கு சென்றார்.
மீண்டும் முல்லா
போன
முறை முகம் சுழித்த பணக்காரர் இந்த முறை மகிழ்ச்சியாக ‘வாருங்கள் முல்லா’ என்று
அழைத்தார். உள்ளே சென்றதும் அனைவரும் ‘இங்கே வாருங்கள் முல்லா. இங்கு அமருங்கள்’
என்று பலர் அழைத்தனர்.
முல்லவால்
இதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நேராகச் சென்று ஒரு தட்டை எடுத்தார் ஒரு
இடத்தில் அமர்ந்தார். உணவை எடுத்து அவர் சாப்பிடாமல் அவர் சட்டைக்கு ஊட்டினார்.
சுற்றி இருந்தவர்கள் ஆச்சிரியத்தோடு அவரைப் பார்த்தனர். ஆனால் முல்லா எதையும்
கண்டுக் கொள்ளவில்லை, தொடர்ந்து தன் சட்டைக்கு ஊட்டிக்கொண்டிருந்தார். நடப்பதை
கேள்விப் பட்டு ஓடி வந்தார் பணக்காரர், ‘முல்லா உங்களுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி
செய்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.
முல்லா,
‘நான் இதற்கு முன் சாதாரண அழுக்கு உடையில் விருந்தில் கலந்துக் கொள்ள வந்தேன்
யாரும் என்னைச் சரியாக உபசரிக்கவில்லை. பின்பு வீட்டிற்கு சென்று உடையை மாற்றி
வந்தேன். அப்பொழுது என்னை அனைவரும் சிறப்பாகக் கவனித்தீர்கள். எனவே விருந்திற்கு
தாம் என்னை அழைக்கவில்லை என் சட்டையைத் தான் அழைத்துள்ளீர்கள். அதனால் தான்
சட்டைக்கு உங்கள் உணவை ஊட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.
பணக்காரரும்
அங்கிருந்த மக்களும் செய்த தவறை சாமர்த்தியமாக உணர்த்திக் காட்டினார் முல்லா.
அங்கிருந்த மக்கள் அனைவரும் திகைத்துப் போகினர். மனிதனை விட உடையைப் பெரிதாக எண்ணிய
அவர்களின் தவறை உணர்ந்தனர்.
தொடர்புடைய பிற கதைகள்:
தொடர்புடைய பிற கதைகள்:
Tamil blogs | ஹோட்ஜாவின் கதைகள்! | short story collection of hilarious Hodja
மேலும் பல கதைகள் படிக்க 'Tamil Stories 4 Everyone' குழுவில்
இணைந்திடுங்கள்! நன்றி!!!
Comments
Post a Comment