Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு வித்தியாசமான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய கதை Tamil blogs | பாவத்தைச் சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused? நீங்கள் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கர்மத்தின் பலனையே நாம் அனுபவிப்போம் என்று கூறுவர். அத்தகைய கர்மம் 'இப்படியும் வேலை செய்யுமா?' என்று கர்மத்தின் ஒரு விதியை ஒட்டிய கதையையே இன்று பார்க்கப் போகிறோம்.
எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் வாக்குவாதம்
ஒருமுறை எமனுக்கும் சித்ரகுப்தனுக்கு ஒரு வாக்குவாதம் வந்தது. முனிவர் இறக்கக் காரணமாக இருந்த ராஜா தான் குற்றவாளி என்றும் அவர் தலையில் பாவச்சுமையை எழுத வேண்டும் என்றும் சித்திரகுப்தன் கூறினார். ஆனால் எமனோ அதை ஏற்க மறுத்தார்.
'நீ கூறுவது தவறு. அந்த ராஜா
குற்றவாளி அல்ல' என்று வாதிட்டார் எமதர்மன். சித்திரகுப்தன் எமனிடம் நிகழ்ந்தவையை விளக்கினார்.
முனிவரைக் கொன்ற ராஜா
பாலைபிரவேசத்தின் ராஜா மிகவும் நேர்மையானவர். தன்னை நாடி
வந்தவர்களுக்கு எத்தகைய உதவியும் புரிந்திடும் அன்பானவர். ஒரு முறை அவரின்
ராஜ்யத்திற்கு, புகழ்பெற்ற முனிவர் ஒருவர் வந்தார். தான் கடும் பசியில்
இருப்பதாகவும் உணவு அளித்துப் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் வேண்டினார்.
இந்தச் செய்தியைக் கேட்ட அடுத்த கணமே ராஜா, தாமே அரண்மனையின் சமையலறைக்கு சென்று அங்கிருந்து
உணவை எடுத்து வந்தார். முனிவரும் மகிழ்ச்சியுடன் உணவை ஏற்றுக் கொண்டு உண்ணத்
தொடங்கினார். சற்று நேரத்தில் முனிவரின் உடல் நீலமாக மாறியது. மயங்கி விழுந்து அந்த
இடத்திலேயே இறந்துவிட்டார் முனிவர்.
நகைச்சுவையான கருத்து நிறைந்த கதை : Tamil blogs | பணக்காரர் வீட்டு விருந்து! ! Mullah at grand food party- short story
அதிர்ச்சியில் உறைந்த ராஜா, அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனின்றி முனிவர் இறந்தார். இதைக் கூறி முடித்த சித்திரகுப்தன், 'உணவில் விஷம் உள்ளதை கூடக் கவனிக்காத அந்த அரசனே குற்றவாளி' என்றார்.
முனிவரைக் கொன்றது யார்?
எமதர்மராஜா தன் வாதத்தைத் தொடங்கினார், 'சித்திரகுப்தா! நீயோ தர்மத்தை முழுமையாகக் காண தவறினாய். நான் அதைக் கண்டு விட்டேன்' என்றார். 'அப்படி என்ன நிகழ்ந்தது தர்மராஜா?' என்று சித்திரகுப்தன் என்று
வியந்து கேட்டார்.
'இந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அந்தக் காலத்திற்கு செல்வோம் வா' என்று இருவரும் அந்தச் சமயத்திற்கு சென்றனர். ராஜா உணவை முனிவருக்காக எடுத்து வந்துகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு கழுகு இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் தூக்கி சென்று கொண்டிருந்தது. இறந்த அந்தப் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் ராஜா கொண்டுவந்த உணவில்
விழுந்தது.
எமன் சித்ரகுப்தனிடம், 'இப்பொழுது குற்றவாளி யார்?' எனக் கேட்டார். சித்திரகுப்தன், 'அந்தக் கழுகு தான், தர்மராஜா!' என்றார். எமன் சிரித்துக் கொண்டே, 'மீண்டும்
நீ தவறாகக் கூறுகிறாய்' என்றார். சித்ரகுப்தனுக்கு ஆச்சரியம், 'ராஜா குற்றவாளி அல்ல. ஆனால், அந்தக் கழுகு ஏன் குற்றவாளி இல்லை என்கிறீர்கள்?' என வினவினார்.
கழுகின் கடமை
எமன், 'அதோ பார் அந்தக் கழுகின் செயலை' என்று காட்டினார். அந்த கழுகு தன் குட்டிகளுக்கு உணவாக அந்தப் பாம்பைக் கொண்டு சென்றது. 'தன் குழந்தைகளுக்கு உணவு தருவது அன்னையின் கடமை, அதைச் செய்வது எப்படி குற்றம் ஆகும்?' என்று புதிர் போட்டார்.
சித்ரகுப்தன் குழப்பத்தில் ஆழ்ந்தார். 'முனிவரைக் கொன்றதற்கான சுமையைத் யார் தலையில் எழுதுவது என்று நீங்களே கூறுங்கள் பிரபு?' என்று பணிவுடன் எமதர்மனிடம் கேட்டார் சித்திரகுப்தன். 'என்னுடன் வா!' என்று சித்ரகுப்தனை அந்த ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே அழைத்துச் சென்றார். எல்லைக்கு வெளியே ஒரு மனிதன் தன் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான்.
மனிதனின் செயல்
வெயில் அடிக்க ஒரு நிழலில் ஓரமாக அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தில், அவனை நோக்கிப் பல முனிவர்கள் வருவதை கண்டான். அந்த முனிவர்கள் அவனை நோக்கி வந்தனர். 'தம்பி உன்னிடம் பருகத் தண்ணீர் உள்ளதா?' என்று கேட்டனர். 'உள்ளது முனிவர்களே பருகுங்கள்' என்று தன் தண்ணீர் குவளையை கொடுத்தான் அவன்.
'தாம் அனைவரும் எங்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?' என்று முனிவர்களைக் கேட்டான். 'அதோ அங்கே பாலை பிரவேசத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். அந்த நாட்டின் அரசன் முனிவர்களை உபசரிப்பதில் சிறந்தவன் எனக் கேள்வி பட்டோம்' என்றனர்.
'அந்த நாட்டின் அரசனா?' என்று சிரிக்க ஆரம்பித்தான். 'அங்கே செல்லாதீர்கள்! அந்த நாட்டின் அரசன் முனிவர்களின் உணவில் விஷம் கலந்து தருகிறாராம். நேற்று கூட ஒரு முனிவர் இறந்துவிட்டார்' என்றான் அவன்.
'பிரவேசத்தின் மன்னனா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டனர். 'ஆமாம் முனிவர்களே' என்றான். முனிவர்கள் பதறிப் போயினர். முனிவர்கள் பயந்து வேறு ராஜ்ஜியத்திற்கு சென்றனர்.
கர்மத்தின் விதி
இவை அனைத்தையும் கவனித்த சித்திரகுப்தன், 'புரிந்து கொண்டேன் பிரபு. பழிச்சுமையை இவன் தலையில் எழுதி விடுகிறேன். உண்மையை உணராமல் அரசனை பழித்துப் பேசினான். முனிவரைக் கொன்ற பாவம் இவனையே சேரும்' என்றார். எமன், 'சரியாக உணர்ந்து கொண்டாய் சித்ரகுப்தா. ராஜாவும் அல்ல கழுகும் அல்ல. இவனே குற்றவாளி' என்றார்.
சமூக வலைதளங்களில் வரும் செய்தியின் உண்மை தன்மையை உணராமல் பகிர்ந்தால் நமக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உள்ளது. புறம் பேசாமல், உண்மையை அறியாது செய்தியைப் பரப்பாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
கர்மத்திற்கு ஏற்றப் பலனையே நாம் அனுபவிப்போம் என்று கூறுவார்கள் இந்தக் கதை உங்களைச் சற்றே மாற்றிச் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
நண்பர்களே!
இன்றைய கதை உங்களுக்குப் பிடித்திருந்ததா? உங்களது கருத்துகளைப் பதிவிடுங்கள்! மேலும் பல கதைகளைத் தெரிந்துக் கொள்ள ‘Tamil Stories 4 Everyone' குழுவில் உறுப்பினராக
இணைந்திடுங்கள்!
Comments
Post a Comment